Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி சென்னையில் துவங்கியது!
பிப்ரவரி 21,2013
அ-
+
Temple images

சென்னை: விவேகானந்தரின், 150வது பிறந்த நாளை யொட்டி, இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 24ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை, 9:30 மணிக்கு துவங்கி, இரவு, 8:00 மணி வரை இதை பார்க்கலாம். கண்காட்சியில் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள், யோகா குறித்த புத்தகங்கள், பாரம்பரிய விளையாட்டுகள், இயற்கை உரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட விளை பொருட்கள், இடம் பெற்று உள்ளன. இந்திய ஆன்மிகத்தின், அனைத்து கூறுகளையும் பறைசாற்றும் வகையில், கண்காட்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 240க்கும் மேற்பட்ட அமைப்புகள் காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  கண்காட்சியின் மற்றொரு சிறப்பு அம்சம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள கோவில்களை பற்றிய குறிப்புகள், சிற்ப விளக்கங்கள், அதன் சிறப்புகள்  விளக்கமாக இடம் பெற்று உள்ளது.  லிங்க தரிசனம் கண்காட்சியில், லிங்க தரிசனத்திற்கு தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குஜராத்தில் உள்ள சோமநாத், நாகேஷ்வரர் கோவில்கள், மத்தியபிரதேசத்தில் உள்ள மகாலோஸ்வரர், ஓம்காரேஸ்வரர், மகாராஷ்டிராவில் உள்ள பிமாசங்கர், திரியம்பகேஸ்வரர் மற்றும் கிருஷ்ணேஸ்வரர், ஜார்கண்ட் வைத்திநாத், ஆந்திரா மல்லிகர்ஜுனா, உத்தரபிரதேசம் கங்கை நதிக்கரையில் உள்ள விஸ்வநாதர், இமயமலையில் உள்ள கேதார்நாத், தமிழகத்தில் ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் உள்ளவை போன்று லிங்கங்கள் தரிசனத்துக்கு கண்காட்சியில்  அமைக்கப்பட்டு உள்ளன. பாரம்பரிய விளையாட்டு பாரம்பரிய விளையாட்டுக்களான, பல்லாங்குழி, பரமபதம், தட்டாங்கல், குச்சிஎடுத்தல், கிச்சுகிச்சு தர்பார், பாண்டி போன்றவையும் இந்த கண்காட்சி அரங்கத்தில் இடம் பெற்று உள்ளன. இது பற்றிய விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். விவேகானந்தர் கல்வி அறக்கட்டளை இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த விளையாட்டை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.  இந்த விளையாட்டு வித்தியாசமாகவும் மனதுக்கு இதமாகவும் இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.

மீனாட்சி கல்லூரி மாணவி கீதா கூறுகையில், கிரிக்கெட், கால்பந்து, டென்னீஸ் போன்ற விளையாட்டுக்கு மத்தியில், பாரம்பரிய விளையாட்டை பார்க்க ஆர்வமாக இருந்தது.  இந்த விளையாட்டு ஏழைகளுக்கான விளையாட்டாக பார்க்கப்படுகிறது. அந்த மனநிலை மாற வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரி களிலும், பாரம்பரிய விளையாட்டை  மீண்டும், அறிமுகம் செய்ய வேண்டும், என்றார். இயற்கை உரம் பசு சாணம் மற்றும் அதன் கோமியத்தில் இருந்து தயாரான இயற்கை உரம், பூச்சி கொல்லி மருந்து ஆகியவையும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.  இயற்கை உரம், 30 ரூபாய்க்கும், பூச்சி மருந்து, 100ரூபாய்க்கும், இந்த கண்காட்சியில் கிடைக்கிறது. நகர்ப்புறத்தில் வீட்டுத்தோட்டம் அமைத் துள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இயற்கை உரம் போட்டு உற்பத்தி செய்யப்பட்ட, அரிசியும் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பல்பொடி, சோப்பு, அழகு பவுடர் என, பல்வேறு பொருட்கள், இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மூலிகை செடிகள் கண்காட்சியில், மூலிகை செடிகள் அரங்கத்துக்கு கடும் வரவேற்பு உள்ளது. ஏகமுகம் ருத்ராட்சம், திருவோடுமரம், மகாவில்லம், சௌகந்தி, கல்காரம், செங்கற்றாழை, பன்னீர் மரம் என, 500க்கும் மேற்பட்ட, மூலிகை செடிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வீட்டில் வளர்க்கும் வகையிலான ஒரு மூலிகை செடியையாவது பலர் வாங்கி செல்கின்றனர்.

மேலும், சேவை மற்றும் பொதுநல அமைப்புகள், தங்கள் பணிகள் குறித்து விளக்கம் தருகின்றன.  கண்காட்சியை வியப்புடன் பார்த்த, நவநீதகிருஷ்ணன் கூறுகையில், ஆன்மிக சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தது போன்ற உணர்வு உள்ளது. பல்வேறு கோவில்களை பற்றியும், வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆன்மிக தலத்தில், இத்தனை சேவை அமைப்புகள் இருப்பதை, இங்கு வந்தபின் தான் தெரிந்து கொண்டேன், என்றார். கண்காட்சியை பார்க்க வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர், குமரி ஆனந்தன் கூறும்போது, ஆயிரக்கணக்கான புத்தகங்களை படித்து பெறும் அறிவையும், ஞானத்தையும் கண்காட்சி வழியாக பெற முடிகிறது. மன அமைதியைக் கொடுக்கிறது, என்றார். கண்காட்சி அரங்கில், பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட, ராஜாசுப்பிரமணியன் எழுதிய, பரமரகசியம் என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.