பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, 19ம் தேதி பூச்சாட்டுதல் உடன் துவங்கி, 26ம் தேதி ஸ்ரீமாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.முக்கிய விழாவான பொங்கல் விழா (சேறு பூசூம் நிகழ்ச்சி) மற்றும் ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீசெல்லியாண்டியம்மன் கோவில் வரை சுவாமி சக்தி அழைக்கும் நிகழ்ச்சி இன்று நடக்க உள்ளது. இதற்காக பவானி, சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் பல இடங்களில் இருந்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் திங்கள் இரவு, 12 மணி முதல், செவ்வாய் மதியம், 12 மணிவரை மூலவர் செல்லியாண்டி அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள் நீர் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், பவானி மேற்கு தெரு மாரியம்மன், வர்ணபுரம் ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் அந்தந்த பகுதியை சார்ந்த பக்தர்கள் கம்பத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து தண்ணீர் ஊற்றி, சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளை பவானி டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் செய்தனர்.
போக்குவரத்து மாற்றம்: செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா இன்று நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில் நடந்தது.இன்று, காலை பவானி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீசெல்லியாண்டியம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், பக்தர்கள் உடலில் சேறு பூசி ஊர்வலமாக வருவார்கள்.இந்த ஊர்வலத்தின்போது, மது குடித்தோர், தகராறு செய்வோர் கைது செய்யப்படுவார்கள். இதற்காக, 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்படுகின்றனர். நிகழ்ச்சிகளை கண்காணிக்க, ரகசிய கேமரா அமைக்கப்படும். சாதாரண உடையில் போலீஸார் ரோந்துப்பணி செய்வர்.விழாவுக்காக, அன்று காலை எட்டு முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மேட்டூரில் இருந்து பவானி வழியாக ஈரோடு செல்லும் பஸ், லாரி போன்ற வாகனங்கள், ஒரு நாள் மட்டும் பவானி நகருக்குள் வராமல், ஊராட்சிகோட்டை மலைப்பாதை வழியாக செலம்பன்கவுண்டம்பாளையம், ஜம்பை பிரிவு, ஆப்பக் கூடல், கவுந்தப்பாடி, சித்தோடு வழியாக ஈரோடு செல்லும்.அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பவானி அனைத்து மகளிர் ஸ்டேஷன் வந்து, மீண்டும் திரும்பி செல்லும்.ஈரோட்டில் இருந்து பவானி வரும் நகர பஸ்கள், பவானி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து திரும்பி செல்லும்.ஈரோட்டில் இருந்து மேட்டூர் வழித்தடத்தில் செல்லும் பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்ட், மகளிர் ஸ்டேஷன், தொட்டிபாளையம், ஊராட்சிகோட்டை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும். கனரக வாகனங்களுக்கு புதன் காலை முதல் நகருக்குள் வர அனுமதி இல்லை.சித்தோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சேலம் பைபாஸ் வழியாக குமாரபாளையம், எடப்பாடி ரோடு, பவானி புதிய காவிரி ஆற்று பாலம் வழியே மேட்டூருக்கு செல்லும், என தெரிவிக்கப்பட்டது.பவானி இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணராஜ், தி.மு.க., நகர செயலாளர் நாகராசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.