பதிவு செய்த நாள்
21
மார்
2013
10:03
சென்னை: கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில், அதிகார நந்தி வாகனத்தில், கபாலீஸ்வரர் திருவீதியுலா நேற்று நடந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, அதிகார நந்தி திருவீதியுலா, நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு நடந்தது.
ஞானப்பால் விழா: வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில், கபாலீஸ்வரர், சர்வ அலங்காரத்தில் திருவீதியுலா வந்தார். அதிகார நந்தி வாகனத்தை பின் தொடர்ந்து, கந்தருவன் வாகனத்தில் சிங்காரவேலரும், கந்தருவி வாகனத்தில், கற்பகாம்பாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், காளை வாகனத்தில்,சண்டிகேஸ்வரரும் உடன் வந்தனர். தொடர்ந்து, குளக்கரையின் தென்பகுதியில், உள்ள மண்டபத்தில், திருஞானசம்பந்தர், அவரது தந்தை சிவபாத இருதயர் ஆகியோருக்கு நீராட்டு நடந்தது. அதையடுத்து திருஞான சம்பந்தருக்கு, ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்று புருஷா மிருகம்: காண கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி என்று, பாபநாசம் சிவன் பாடிய, கபாலீஸ்வரர் அதிகார நந்தி சேவையை காண, அதிகாலை, 5:00 மணி முதலே, திரளான பக்தர்கள் கூட்டம் காத்து கிடந்தது. இரவு, பூத வாகனத்தில், கபாலீஸ்வரரும், பூதகி வாகனத்தில், கற்பகாம்பாளும், தாரகாசுர வாகனத்தில், சிங்காரவேலரும் வீதியுலா வந்தனர். இன்று, புருஷா மிருகம், சிங்கம், புலி வாகனங்களில், சுவாமி திருவீதியுலாவும், இரவு, நாகம், காமதேனு, ஆடு வாகனங்களில் திருவீதிஉலாவும் நடக்க உள்ளன.
சிறப்பு என்ன? : அதிகார நந்தி, கயிலாயத்தின் வாயிலில், சாரூப்ய நிலையில் (இறைவனை போலவே மூன்று கண்களும், நான்கு கைகளும், மானும், மழுவும் உள்ள நிலை) இருப்பார். சிவனை தரிசிக்க வருவோரை, உள்ளே அனுப்ப கூடிய, அதி காரத்தை உடையவரே அதிகார நந்தி. இவர், சிவனை தாங்கி வருவதே, அதிகார நந்தி வீதியுலாவாக கொண்டாடப்படுகிறது.
அதிகார நந்தி சேவை-சிறுவர்கள் பேட்டி
அதிகார நந்தி சேவை ரொம்ப, ரொம்ப... சூப்பர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளான, நேற்று நடந்த அதிகார நந்தி வாகன வீதியுலாவில், குழந்தைகள், சிறுவர், சிறுமியர் குதூகலமாக பங்கேற்றனர். அதிகார நந்தி வாகன சேவை குறித்து, அவர்களில் சிலரிடம் எடுத்த பேட்டி:
சரண்யா, 10, மந்தைவெளி: தொடர்ந்து, மூன்று நாட்களாக கோவிலுக்கு வருகிறேன். குழந்தையில் இருந்தே என்னை எனது அம்மா, அதிகார நந்தி சேவைக்கு அழைத்து வருகிறார். இது, எனக்கு விவரம் தெரிந்து, இரண்டாவது ஆண்டு. இந்த வாகனத்தில், ”வாமியை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. ரொம்ப...ரொம்ப சூப்பர்.
வைபவ், 9, மயிலாப்பூர்: ஆண்டுதோறும், அதிகார நந்தியை காண, குடும்பத்தினர் அழைத்து வருவர். அதிகார நந்தி உடன் செல்லும், விநாயகர் வாகனத்தில், நண்பர்களுடன் ஏறி அமர்ந்து கொள்வேன். அதில் இருந்தவாறே, அதிகார நந்தியை வேண்டுவேன். இந்த வண்டியில் அமர்ந்தே, மாட வீதிகளை சுற்றி வருவேன். கொஞ்ச நேரம் ஆனவுடன், பள்ளிக்கு சென்று விடுவேன்.
ஐஸ்வர்யா, 11, மந்தைவெளி: அதிகார நந்தி வாகனத்தில், கபாலீஸ்வரரை தரிசனசம் செய்ய, என் அப்பாவுடன், தொடர்ந்து, எட்டு ஆண்டுகளாக வருகிறேன். அதிகார நந்தியை பார்த்து, உறுதி, பணிவு, துணிவு ஆகியவற்றை நாம் கற்று கொள்ள வேண்டும் என, அப்பா சொல்வார். அது, இந்த சுவாமியை பார்க்கும் போது தெரிய வருகிறது.