பதிவு செய்த நாள்
10
மே
2013
10:05
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடிமரத்திற்கு, தங்கத்தகடு பொருத்தும் பணி, நேற்று துவங்கியது. இக்கோயிலில் விழாக்கள் துவங்குவதை அறிவிக்கும் விதமாக, சுவாமி சன்னதி எதிரேயுள்ள பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இக்கொடிமரம் அமைக்கப்பட்டது என்ற விபரம் கிடைக்கவில்லை. பழமையான தேக்கு மரத்தில் கொடிமரம் செய்யப்பட்டிருந்தது. சில நாட்களுக்கு முன் அதில், பழுது ஏற்பட்டது.
இதை அடுத்து, புதிய கொடி மரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, செங்கோட்டையில் இருந்து, புதிய தேக்கு மரம் கொண்டுவரப்பட்டது. அதை, வடக்காடி வீதியில் செதுக்கி, வடிவமைத்தனர். ஆகமவிதிப்படி, புதிய கொடிமரம் உருவாக்கப்பட்டுள்ளது. 67 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்திற்கு, 10.25 கிலோ எடையுள்ள தங்கத்தகடு பதிக்க, கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கோயில் நகைகளை பயன்படுத்த முதல்வர், ஜெயலலிதா அனுமதி வழங்கினார். இதையடுத்து, ரூ.3 கோடியில், 10.25 கிலோ எடையில் கொடிமரத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.
கோயில் தேர் பாதுகாப்பு: மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்கள் பாதுகாப்பில், போலீசாருக்கு பதில், மாஜி ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை தொடர்ந்து, கோயில் மட்டுமில்லாமல், கீழமாசிவீதியில் நிறுத்தப்பட்டுள்ள இரு தேர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு தேருக்கு ஒரு எஸ்.ஐ., உட்பட மூன்று போலீசார், சுழற்சி முறையில், 24 மணி நேரம் பணிபுரிந்தனர்.இந்நிலையில், மத்திய உளவுத்துறை அறிவுரைப்படி, கோயில் நிர்வாகம் சார்பில், பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், கோயிலின் முக்கிய பகுதிகளில் பணிபுரிகின்றனர். இதில், இருவர் நேற்று முதல் தேர் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.