பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
ஸ்ரீபெரும்புதூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, அசிதாரண்ய சாலபுரிஸ்வரர் கோவில், ஒரு கால பூஜை கூட நடத்த முடியாமல் முடங்கி உள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இருங்காட்டுகோட்டை கிராமத்தில், கி.பி.1205ம் ஆண்டு, ராஜேந்திர சோழனின் மகன், ராஜாஜி ராஜா சோழன் காலத்தில் கட்டப்பட்ட, அபினேஸ்வரி அம்பாள் உடனுறை அசிதாரண்ய சாலபுரிஸ்வரர் கோவில் உள்ளது.
சிதிலம்: பிற்கால ஆட்சியாளர்களின் படையெடுப்பால், இக்கோவில் மற்றும் மூலவர் மண்டபம் சிதிலமடைந்தன. கடந்த 1960ம் ஆண்டு, அக்கோவிலில் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை தொடர்ந்து, 47 ஆண்டுகளுக்கு பின், கடந்த 2007ம் ஆண்டு, கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில், அசிதாரண்ய சாலபுரிஸ்வரர், அபினேஸ்வரி அம்பாள், விளம்புரி விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆனால், கோவிலுக்கு போதிய வருவாய் இல்லாத காரணத்தால், தினமும் பூஜைகள் நடைபெறாமல் முடங்கி உள்ளது.
புனரமைப்பு: இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த ஆஞ்சநேயர் கூறியதாவது: பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவில், கிராமத்தினர் மற்றும் தனிநபர்கள் நன்கொடையில், 2007ம் ஆண்டு, புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், நந்தி ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், போதிய வருவாய் இன்றி, கோவிலில், ஒரு கால பூஜை கூட நடைபெற முடியாத நிலை உள்ளது. எனவே, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை, இந்து சமய அறநிலையத் துறையினர், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பூஜைகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.