பதிவு செய்த நாள்
21
ஏப்
2014
11:04
பொன்னேரி : அரியும் அரனும் சந்திக்கும், சந்திப்பு திருவிழா, வாண வேடிக்கைகளுடன் வெகுவிமரிசையாக நடந்தது.பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு, பெருமாளும், அகத்தீஸ்வரரும் ஒரு சேர வந்து பக்தர்களுக்கும், முனிவர்களுக்கும் அருள்பாலிக்கும் சந்திப்பு திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.கருட வாகனத்தில் கரி கிருஷ்ணப் பெருமாள் ஹரிஹரன் பஜார் வீதி தேரடி முனையிலும், ஆனந்தவல்லி அம்மையார், நந்திகேஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர் என பஞ்ச மூர்த்திகளுடன் சேஷ வாகனத்தில் அகத்தீஸ்வரர் மறுமுனையிலும் நின்றனர். சிவாச்சாரியார்களும், பட்டாச் சார்யார்களும் சுவாமிகளுக்கு தீபாராதனை செய்தனர். கரிகிருஷ்ண பெருமாளும், அகத்தீஸ்வரரும் ஒரே சமயத்தில் எழுந்தருளினர். பொன்னேரி கோதண்ட ராமன் சன்னிதியின் முன், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய, பரத்வாஜ முனிவர்களின் முன்னிலையில் சந்தித்து கற்பூர ஆரத்தி கொடுத்து அருள்பாலித்தனர். கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமோ நமஹ! ஓம் நமச்சிவாயா! என கோஷம் எழுப்பி பெருமாளையும், சிவபெருமானையும் ஒரு சேர வணங்கிச் சென்றனர்.