பதிவு செய்த நாள்
27
ஆக
2014
10:08
சைவர்களின் பிரதானமான இரு கோவில்களில் ஒன்றான திருவாரூரில், வல்லபை கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஸ்தம்ப கணபதி, நீதிவிடங்க கணபதி, மூலாதார கணபதி, ஐங்கலக்காசு பிள்ளையார், நெல்லிக்காய் பிள்ளையார், வாதாபி கணபதி, மாற்றுரைத்த பிள்ளையார், ஆகாச விநாயகர், ஆனந்த கணபதி என்ற பெயர்களில், விநாயகப் பெருமான் பல்வேறு இடங்களில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவர்களில், வாதாபி கணபதியை, சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், ’வாதாபி கணபதி பஜேம்’ என்ற, புகழ்பெற்ற கீர்த்தனத்தால் பாடியுள்ளார். யோக வித்தைத் தலமான திருவாரூரில், யோக வித்தையின் மூலாதாரமான மூலத்தில் வீற்றிருப்பவர், மூலாதார கணபதி. இவர், தியாகராஜர் ஆலயத்திலுள்ள மகாமண்டபத் துாணில் எழுந்தருளி உள்ளார். பாம்பு வடிவில் துதிக்கப்படும், குண்டலினி எனும் சக்தி மண்டலத்தின் மீது ஆடியபடி, இவர் காட்சி தருகிறார்.
சுருண்டு கிடக்கும் பாம்பாக, குண்டலினி சக்தி காட்டப்பட்டுள்ளது. குண்டலினி சக்தி விழிப்புற்றதைக் குறிக்கும் வகையில், அதன் தலைகள் துாக்கி உள்ளன. சுருண்டு கிடக்கும் பாம்பின் நடுவில், விரிந்த தாமரை மலர் இருக்கிறது. அம்மலரின் மீது, விநாயகர் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். அவரின் ஆட்டத்தை, இரண்டு பூத கணங்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இத்தகு சிலை, வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. ஐங்கலக் காசு விநாயகர், அழகிய செப்புத் திருமேனியாகக் காட்சி தருகிறார். தல புராணத்தில், இவரைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவர், மூலஸ்தான மூர்த்தியான திருமூலட்டானருக்கும், பூங்கோவிலில் வீற்றிருக்கும் தியாகேசப் பெருமானுக்கும் நடுவில், தனிச் சிற்றாலயத்தில் எழுந்தருளியுள்ளார். பெருந்திருவிழாவில், பஞ்சமூர்த்திகளில் ஒருவராக எழுந்தருள்பவர் இவரே. கமலாலயத்தின் ஈசான மூலையில் எழுந்தருளியிருக்கும் மாற்றுரைத்த பிள்ளையார், ஆதி முதலே இங்கு இருப்பவர் என்றாலும், சுந்தரருக்கு அருள் செய்ததால், தனிப் பெயரும் சிறப்பும் பெற்றுள்ளார். திருமுதுகுன்றத்தில் இறைவனை வேண்டிப் பெற்ற, ஆயிரம் பொன்னை, சுந்தரர், இறைவன் ஆணைப்படி, மணிமுத்தாற்றில் இட்டார். பின் திருவாரூர் வந்து, கமலாலயத்தில் தேடி எடுத்தார். சுந்தரர், அங்கு வீற்றிருக்கும் விநாயகப் பெருமானிடம், அப்பொன்னை அளித்து, மாற்றுக் கல்லில் உரைத்து, அதன் மதிப்பைச் சோதித்து அறிவிக்கும்படி வேண்டிக் கொண்டார். விநாயகரும், தங்கத்தை மாற்றுக் கல்லைக் கொண்டு உரைத்து, அதன் மதிப்பை தெரிவித்தார். அன்று முதல் அப்பிள்ளையார், ’மாற்றுரைத்த விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். அவரின் கோவில், கமலாலயக் குளத்தின் ஈசான திக்கில், கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.
ஆகாசப் பிள்ளையார் பரவை நாச்சியாரைக் கயிலைக்கு அனுப்பியவர். சுந்தரரின் மனைவியாரான பரவையார், சிவயோகம் பயின்றவர். தினசரி, விநாயகரை பூஜை செய்பவர். சுந்தரர், கேரளாவில், திருவஞ்சைக்களத்தில் இருந்து, கயிலைக்கு, வெள்ளானையில் சென்றதை, பரவையார் யோகத்தில் உணர்ந்தார். பூஜையின் இறுதியில் விநாயகரே, அவரை தமது துதிக்கையால், கயிலையில் விடுத்தார். அதனால் அவர் ஆகாசப் பிள்ளையார் என, அழைக்கப்படுகிறார். இவர் திருவாரூரில், தென் பிரகாரத்தில் எழுந்தருளி உள்ளார்.