மதுரை : சிவன் திருவிளையாடல் புரிந்த மதுரையில் இன்று சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவின் பெருமை குறித்து திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் கூறியதாவது: மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் புகழ் மிக்க தலம் மதுரை. இங்கு சிவபெருமான் தன் அடியார்களுக்கு அருள்புரிய 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். பக்தர்களைக் காப்பதற்காக தமிழ்ப் புலவராக, சித்தராக, பிட்டுக்கு மண் சுமக்கும் தொழிலாளியாக, விறகு விற்பவராக பல வேடங்களைத் தாங்கி வந்தார். அவரே பாண்டிய நாட்டின் மன்னராகவும் வீற்றிருந்து ஆட்சி புரிந்தார்.
ஆவணித் திருவிழாவில் இவருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படும். இந்த விழா இன்று இரவு 7.15 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கிறது. ஆவணி முதல் சித்திரை வரை சுந்தரேஸ்வரரே மன்னராக இருந்து மதுரையை ஆட்சி புரிவார். சித்திரை மாதம் முதல் மீனாட்சியின் ஆட்சி நடக்கும். ஆணும், பெண்ணும் சமம் என்பதையும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் உலகத்தில் நற்பலன்கள் நடக்கும் என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.சிவபெருமான் பட்டம் சூட்டிக் கொள்ளும் இந்த நாளில் மதுரையின் பெருமையை உணர்ந்து அதன் புனிதம் காக்க வேண்டும்.