சபரிமலை: சபரிமலையில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான களபபூஜை தற்போது தினசரி வழிபாடாக மாறியுள்ளது. இதற்கு 19 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நாட்களில் அதிகாலை 3.15 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும் தொடர்ந்து நெய்யபிஷேகம் நடைபெறும். இதனால் ஐயப்பனின் விக்ரகத்தில் ஏற்படும் சூட்டை தணிப்பதற்காகவும், ஐயப்ப சைதன்யத்தை (சக்தி ) அதிகரிப்பதற்காகவும் களபபூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை பக்தர்களின் வழிபாடாக நடத்தப்படுகிறது. பூஜிக்கப்பட்ட பிரம்ம கலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு அதனை மேல்சாந்தி கையில் ஏந்திய படி தந்திரி மற்றும் தேவசம் அதிகாரிகளுடன் மேளம் முழங்க கோயிலை வலம் வருகின்றனர். பின்னர் கோயிலுக்குள் கலசம் கொண்டு செல்லப்பட்டு ஐயப்பனின் விக்ரகத்தில் களபம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டுக்கு தேவசம்போர்டு கட்டணமாக மூவாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் களப அபிஷேகத்துக்கான பொருட்களுக்கு 16 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியதாவது: களப அபிஷேகம் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப்படும் மிக முக்கிய வழிபாடு. தற்போது களபபூஜை எல்லா நாளிலும் ஒரு வழிபாடாக நடத்தப்படுகிறது. இதில் பக்தர்கள் அதிகம் பங்கேற்கின்றனர். முன்பு ஜன,18ம் தேதி மட்டும்தான் களபபூஜை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.