பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
12:04
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பங்குனித் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐம்பெரும் திருச்சபைகளில், முதன்மையான ரத்தினசபை என்றழைக்கப்படுவது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். இக்கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. காலை 10:30 மணியளவில், வண்டார்குழலி அம்பாள் சமேதராக வடாரண்யேஸ்வரர் கோவில் முன்பாக நிறுத்தப்பட்ட கமலத் தேருக்கு எழுந்தருளினார். பின், காலை 10:40 மணியளவில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டம் துவங்கியது. கோவிலைச் சுற்றி நான்கு வீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில், தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு 9:00 மணிக்கு, திருக்கல்யாண அபிஷேகம் நடைபெற உள்ளது.
ஒத்தாண்டீஸ்வரர் கோவில்: வெள்ளவேடு அடுத்த, திருமழிசை குளிர்ந்த நாயகி உடனாகிய ஒத்தாண்டீஸ்வரர் கோவிலில், நேற்று காலை 8:45 மணிக்கு குளிர்ந்த நாயகியுடன் சோமாஸ்கந்தர் தேரில் எழுந்தருளினார். பின் நான்கு சிறிய தேர்களில் முறையே விநாயகர், அம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் ஆகியோரும் எழுந்தருளினர். தொடர்ந்து, அனைத்து தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர்.மாடவீதிகளை வலம் வந்த தேர்கள், பின் நிலைக்கு வந்தன.
திருப்பாலீஸ்வரர் கோவில்: திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில், நேற்று வண்ண பூக்கள் மற்றும் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், உற்சவ பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்தார். பொன்னேரி, திருப்பாலைவனம், வஞ்சிவாக்கம், மெதுார், ஆவூர், வேம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்தனர். வாண வேடிக்கைகளுடன் காலை, 9:00 மணிக்கு நிலையில் இருந்து தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள், தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
முன்குடுமீஸ்வரர் கோவில்: பொன்விளைந்தகளத்துாரில் கி.பி. 8ம் நுாற்றாண்டில், இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற முன்குடுமீஸ்வரர் கோவில், தற்போது தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக, காலை 7:30 மணியளவில், மீனாட்சி அம்பாள் உடனுறை முன்குடுமீஸ்வரர், கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். காலை 8:00 மணியளவில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வலம் வந்து, தேரின் முன்பு ஏராளமான பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர். பிற்பகல் 12:30 மணியளவில் தேர், நிலைக்கு வந்தது.