பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
மோகனூர்: மாரியம்மன் கோவில் விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டும் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த, 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, அக்னி சட்டி மற்றும் பால் குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, அதிகாலை, 5 மணிக்கு பூக்குழி பூஜை போடப்பட்டது. அன்று மதியம், 1 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் உள்ள குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று மாலை, 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று, (ஏப்., 28) காலை, 6 மணிக்கு கிடா வெட்டு, மாவிளக்கு பூஜையும் தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். மாலை, 6 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு கம்பம் பிடுங்கி ஆற்றில் விடப்படுகிறது. காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.