புதுச்சேரி: உருளையன்பேட்டை சித்தி விநாயக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா நடந்தது. உருளையன்பேட்டை சித்தி விநாயக சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், அம்மன் பண்டிகை விழா நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை அம்மன் கலச புறப்பாடும், 1:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் அலகுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தேவாங்கர் குல மரபினர் சார்பில் கத்தி போட்டுக் கொண்டு ஊர்வலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. இன்று 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் மஞ்சள் நீர் திருவிழா நடக்கிறது. நாளை 24ம் தேதி இரவு 8:00 மணிக்கு சாமுண்டீஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.