பதிவு செய்த நாள்
30
ஜூலை
2015
12:07
கொசப்பேட்டை: திரு.வி.க., நகர் மண்டலம், 76வது வார்டு, கொசப்பேட்டையில், அறநிலைய துறைக்கு சொந்தமான, கந்தசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன; வரும், செப்டம்பரில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோவிலுக்கு சொந்தமான சரவணப் பொய்கை குளத்தில், கடந்த 21ம் தேதி, துார்வாரும் பணி நடைபெற்றது. துார்வாரப்பட்ட மண், குளத்தின் சுற்றுச்சுவர் அருகில் கொட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால், கொட்டப்பட்ட மண் மீண்டும் கரைந்து குளத்திற்குள் செல்கிறது. ஒரு யூனிட்டுக்கும் அதிகமான மண் கரைந்து குளத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது. குளத்தின் வளாகத்தில் சிறிய அம்மன் கோவில் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள், சேற்று மண்ணில் சிக்கும் அவலம் நீடிக்கிறது. கொட்டப்பட்ட மண், சுற்றுச்சுவரை வெளி நோக்கி தள்ளுவதாலும், சுற்றுச்சுவரில் உள்ள அரச மர வேர்களாலும், ஆங்காங்கே விரிசல் விழுகிறது. துார்வாரப்பட்ட மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.