பதிவு செய்த நாள்
01
டிச
2015
11:12
ராமநாதபுரம்:உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் நவபாஷாண கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறையிடம்
ஒப்படைக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் நவகிரகங்களை வழிபட்டு முன்னோருக்கு தர்ப்பணம், திருமண தடை நீங்க பரிகார பூஜைகள் செய்கின்றனர். கோயிலை தேவிபட்டினம் ஊராட்சி நிர்வகித்தது.பரிகார பூஜைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நவபாஷாணம் கடல் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. இதை தடுக்க வேண்டும் என, தேவிபட்டினம் முருகேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் ராமசுப்ரமணியன், கிருபாகரன் உத்தரவின்படி, வழக்கறிஞர் கமிஷனர் சங்கரன் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், பக்தர்கள் ஆடைகளை கடலில் விடுவதால் மாசு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும். நுழைவாயிலில் உள்ள கழிப்பறையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து, நவபாஷாணம் கோயில், நடைபாலத்தை இந்துசமய அறநிலையத்துறையிடம் ஊராட்சி நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும். வழக்கறிஞர் கமிஷனர் பரிந்துரைகளை நிறைவேற்றும் சாத்தியக்கூறு குறித்து, டிச.,3 ல் அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்துசமய அறநிலையத்துறை சார்பில் அரியாக்குறிச்சி வெட்டுடைகாளியம்மன் கோயில் செயல்அலுவலரும், நவபாஷாண கோயில் தக்காருமான செல்வி, அரியக்குடி கோயில் செயல் அலுவலர் மகேந்திரன், ஆய்வாளர்கள் சுந்தரேஸ்வரி, முருகானந்தம், தனலட்சுமி ஆகியோர் நேற்று தேவிபட்டினத்திற்கு வந்தனர். கோயில் நிர்வாக பொறுப்புகளை பெற்று கொண்டனர். பின், நுழைவு கட்டணம் உட்பட அனைத்து வரிகளையும் ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து அங்கு பரிகார பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர்களை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்சாமுவேல் அப்புறப்படுத்தினார். தற்காலிகமாக, பூஜைகள் செய்ய, நான்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். கடலில் கிடந்த துணிகள் அப்புறப்படுத்தப்பட்டன.தக்கார் செல்வி கூறுகையில், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு வரும்வரை எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.