பதிவு செய்த நாள்
02
மே
2016
11:05
ஐதராபாத்: உலகின் பணக்கார ஹிந்து கோவிலை நிர்வகித்து வரும், திருமலை - திருப்பதி தேவஸ்தானம், பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய, தங்க சேமிப்பு திட்டத்தில், தன் வசமுள்ள, 7.5 டன் தங்கத்தை முதலீடு செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதன் நிர்வாக அலுவலர் சாம்பசிவ ராவ், ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது: மத்திய அரசு அறிமுகப்படுத்திய, தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ், 1.3 டன் தங்கத்தை, பஞ்சாப் நேஷனல் வங்கியில் முதலீடு செய்துள்ளோம். தவிர, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின், 7.5 டன் தங்கம், பல்வேறு வங்கிகளில், வெவ்வேறு திட்டங்களின் கீழ் வைத்துள்ளோம். தங்க முதலீட்டு திட்டத்தில் சில திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், இந்த, 7.5 டன் தங்கத்தையும், அந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்வது குறித்து பரிசீலிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.