பதிவு செய்த நாள்
03
மே
2016
11:05
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேருக்கு ரூ. ௨ லட்சம் மதிப்புள்ள புதிய இரும்பு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வில்லியனுாரில் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், சுவாமி வீதியுலா வரும் வகையில் நிலை தேர்கள் இருப்பது வேறெங்கும் இல்லாத தனி சிறப்பாகும். திருக்காமீஸ்வரர், கோகிலாம்பிகை, விநாயகருக்கு தனித்தனி தேர்கள் உள்ளன. திருக்காமீஸ்வரர் தேர் 67 அடி உயரம், 36 அடி அகலத்துடன் 84 டன் எடை கொண்டது. இத்தேர், நான்கு இரும்பு சக்கரங்கள், இரண்டு மர சக்கரங்களை கொண்டுள்ளது. 33 அடி உயரம், 21 அடி அகலமுள்ள கோகிலாம்பிகை தேர், ஆறு மர சக்கரங்களை கொண்டுள்ளது. இந்நிலையில், கும்பகோணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.௨ லட்சம் செலவில் நான்கு இரும்பு சக்கரம் மற்றும் அதனை இணைக்கும் இரு அச்சுகளை, திருச்சி பெல் நிறுவனத்தில் தயாரித்து, கோவிலுக்கு வழங்கினர். கோகிலாம்பிகை தேருக்கு புதிய இரும்பு சக்கரம் பொருத்தும் பணி, விரைவில் துவங்கப்பட உள்ளது.