திருநெல்வேலி: செப்பறை கோயிலில் ஆனித்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. வரும் 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணிக்கரையில் செப்பறை அழகியகூத்தர் பிரான் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசபையாக இந்த கோயில் பிரசித்திபெற்றது.இங்குள்ள கோயிலின் மேற்கூரை செப்புதகடுகளால் வேயப்பட்டுள்ளதால் செப்பறை கோயில் எனப்பெயர் பெற்றது.சிதம்பரம் கோயிலில் விழா நடக்கும் அதே நாட்களில் செப்பறை கோயிலிலும் விழா நடப்பது சிறப்புக்குறியதாகும்.இங்கு ஆனித்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலையில் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம் நடந்தன.வரும் 7 ம் தேதி உருகுசட்டசேவையும், இரவில் சிகப்பு சாத்தி தரிசனமும் நடக்கிறது. 9ம் தேதி காலை 11 மணிக்கு திருத்தேரில் அழகியகூத்தர் எழுந்தருளுவார். 11.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 10ம் தேதி சுவாமி சபையில் எழுந்தருளுவார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்துவருகின்றனர்.