கார்த்திகை திருநாளுக்காக புதிய விளக்குகள் அறிமுகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2016 11:11
மானாமதுரை: மானாமதுரையில் கார்த்திகை திருநாளுக்காக புதிய டிசைன்களில் விளக்குகள் அறிமுகமாகியுள்ளன. வரும் டிசம்பர் 12ம் தேதி கார்த்திகை திருநாள். வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். பெரும்பாலான வீடுகளில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக சிறிய ரக விளக்குகள் கொண்ட ரெடிமேட் பாக்கெட் விளக்கு விற்பனையாகின்றன. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் ரெடிமேட் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, ஊதா உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் விளக்குகள் தயாரிக்கின்றனர். 10 கிராம்,15 கிராம்,25 கிராம் எடை கொண்ட விளக்குகள் பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு பாக்கெட் (10 விளக்குகள்) 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.இதுதவிர பேன்சி ரக விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. சித்தி புத்தி விநாயகர், மூன்று முக விநாயகர்,குபேர விநாயகர், பெண் தோற்ற விளக்கு என பலவித வடிவங்களில் பேன்சி விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப்பாளர் சிவகுமார்: பேன்சி ரக விளக்குகள் பெரும்பாலும் ஆர்டர் கொடுத்தால் மட்டுமே செய்து தருகிறோம்.ஒரு விளக்கு 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். மக்கள் பலரும் சிறிய ரக விளக்குகளையே விரும்புவார்கள். கடந்த இரு ஆண்டுகளாக விளக்கு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான மெழுகின் விலை கிலோ 110 ரூபாய் என்ற அளவிலேயே இருப்பதால் விளக்குகளின் விலை அதிகரிக்கவில்லை, என்றார்.