பதிவு செய்த நாள்
06
டிச
2016
03:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பழைய உற்சவர் சிலைக்கு பதிலாக புதிய சிலை செய்யப்பட்டு அதற்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பழைய உற்சவர் அதாவது சோமாஸ்கந்தர் சிலை, 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவில் பிரமோற்சவம் உட்பட இக்கோவில் நடைபெறும் பல்வேறு விழாக்களுக்கும் இந்த உற்சவர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதால், ஊர்வலத்திற்கு பயன்படுத்த முடியாது என, கோவில் ஸ்தானிகர்கள் தெரிவித்துள்ளதால், இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் படி, கடந்த ஆண்டு புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. அந்த சிலை, பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்தினால் உடன் செல்லும் ஏலவார்குழலி உற்சவர் சிலையும் புதியதாக செய்ய வேண்டும்; பழைய சிலையை பயன்படுத்தக் கூடாது என, ஆகம விதி உள்ளதால், அம்பாள் உற்சவர் சிலையும் புதியதாக செய்யப்பட்டது.
இந்த சிலை பணி முடிந்து, சில நாட்களுக்கு முன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆணையர் உத்தரவுப்படி நேற்று காலை, 7:30 மணிக்கு புதிய உற்சவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அடுத்த மாதம் காணும் பொங்கல் அன்று, திம்மசமுத்திரம் பகுதியில் பார்வேட்டை உற்சவம் நடக்க இருக்கிறது. இந்த உற்சவத்திற்கு புதிய சிலையா அல்லது பழைய சிலை பயன்படுத்தப்படுமா என, பின்னர் அறிவிக்கப்படும். தற்போது புதிய சிலையை உற்சவத்திற்கு பயன்படுத்த தடை விதிக்க, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி எந்த சிலையை பன்படுத்துவது என்று தீர்ப்புக்கு பின் தெரியும் என, கோவில் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்த புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேம் நடத்தக்கூடாது என, பக்தர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.