பதிவு செய்த நாள்
24
ஜன
2017
11:01
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 6:05 மணிக்கு த்வஜாரோணம் (கொடியேற்றம்) நடைபெற்றது. பின், காலை, 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முதல் நாளான, இன்று, காலை, 7:30 மணிக்கு ஹம்ச வாகனத்திலும், இரவு, 7:00 மணிக்கு சூரியபிரபையிலும் பெருமாள் வலம் வருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, நாளை, கோபுர தரிசனம், காலை, 5:00 மணிக்கு நடக்கிறது. கருட வாகனத்தில் வீதி புறப்பாடு, காலை, 7:00 மணிக்கும், அன்றிரவு அனுமந்த வாகனத்தில், இரவு, 8:00 மணிக்கும், பெருமாள் வீதிஉலா நடைபெறும்.