பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
ஊத்துக்கோட்டை: சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, அங்காளம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் ஏந்திச்சென்று அபிஷேகம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயிஅம்மன் கோவில். சிறப்பு பூஜை இக்கோவிலில், சித்திரை மாத அமாவாசைஒட்டி, மூன்றாம் ஆண்டு, மயான கொள்ளை நிகழ்ச்சி, 24ம் தேதி துவங்கியது.
ஐந்து நாள் விழாவின், நான்காம் நாளான நேற்று, அங்காளம்மனுக்கு பால் அபிஷேக நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பக்தர்கள் கிராம எல்லையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தினர். அதை தொடர்ந்து, பக்தர்கள் பால்குடம் ஏந்திகிராமத்தில் உள்ள வினாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களையும் வலம் வந்து, பெரியாயிஅம்மன் கோவிலுக்குச்சென்றனர். கோவில் வளாகத்தில் உள்ள அங்காளம்மனுக்கு பக்தர்கள் எடுத்துச்சென்ற பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பொங்கல் வழிபாடு தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவின் கடைசி நாளான இன்று காலை, 9:00 மணிக்கு, பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபடுவர்.