பதிவு செய்த நாள்
24
ஜூன்
2017
11:06
மடத்துக்குளம் அருகே பல நுாற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட புலிகுத்திக்கல்லை, தலைமுட்டிசாமியாக நினைத்து, மக்கள் வினோத வழிபாடு செய்கின்றனர். மடத்துக்குளம் அமராவதி ஆற்றின்கரையில் அமைந்துள்ள வடக்குகண்ணாடிபுத்துார் பழமையான கிராமங்களில் ஒன்றாகும். இங்கு பழமையின் சின்னங்கள் காணப்படுகின்றன. இதில், குறிப்பிடும்படியானதாக தலைமுட்டிசாமி வழிபாடு உள்ளது. தலைவலியால் அவதிப்படும் மக்கள் தங்கள் நோய்தீர்க்க வேண்டி, வெற்றிலை, பாக்கு, புகையிலையுடன், ஒன்னேகால்ரூபாய் காணிக்கையை இங்குள்ள சாமிசிலையின் முன்பு வைத்து வணங்கிய பின்பு, நெற்றியால் சிலையில் முட்டுகின்றனர். பின்பு, மீண்டும் வணங்கிவிட்டு வந்தால் தலைவலி குணமாவதாக நம்புகின்றனர்.
இன்றும் இந்த வினோத வழிபாடு நடக்கிறது. இந்த சிலையை தலைமுட்டிசாமி என பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு ஆண், ஒரு விலங்குடன் மோதுவதை போல் இந்த சிலை அமைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த வழிபாடு பலஆண்டுகாலமாக நடக்கிறது. தற்போது, பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து, இந்த இடம் பராமரிப்பின்றி போனாலும், பழமைமாறாத முதியவர்கள் தலைவலி நீங்குவதற்கு, தற்போதும் இந்த வினோத வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்றனர். வரலாற்றில் ஈடுபாடுள்ளவர்கள் கூறுகையில், தலைமுட்டிசாமி என இதை அழைத்தாலும், இது புலிக்குத்திக்கல்லாகும் என்றனர். புலிகுத்திக்கல் வரலாறு பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, கால்நடைகள் வளர்ப்பு மிக முக்கியத்தொழிலாக இருந்தது. தற்போது போல் இவ்வளவு நெருக்கமாக கிராமங்கள் இல்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாகவும் அதிக தொடர்புகள் இல்லாமலும் இருந்தன. இந்த கிராமங்களுக்கு இடையிலுள்ள இடைவெளியிலும், மலைசார்ந்த பகுதியிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன.
இந்த மேய்ச்சல் நிலங்களை சுற்றி பட்டிகள் அமைத்து கால்நடைகள் வளர்க்கப்பட்டன. மந்தை, மந்தையாக மேயும் கால்நடைகளை புலி, சிறுத்தை போன்ற காட்டுமிருகங்கள் திடீரென தாக்கி தங்களுக்கு இரையாக்கிக்கொண்டன. தாக்குதல்களிலிருந்து மாடுகளை பாதுகாக்க பல வீரர்கள் காவலுக்கு அமர்த்தப்பட்டு, வாள், குறுவாளுடன் காவல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கால்நடைகளை வேட்டையாட வரும் விலங்குகளுடன் போராடி அதை கொன்றனர். எதிர்பாராதவிதமாக வீரர்கள் உயிரிழந்தால், அவர்கள் நினைவாக கல்லில் சிலை செதுக்கி வழிபடுவது பழமையான வழக்கம். இந்த சிலையை புலிகுத்திக்கல் என குறிப்பிடுகின்றனர். மடத்துக்குளம் மட்டுமின்றி, பல்லடம், ஆனைமலை, மூலனுார் மற்றும் பல இடங்களில் இந்த புலிக்குத்திக்கல் காணப்படுகிறது. இதன்மூலம் இந்த பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருந்ததோடு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்ததை தெரிந்து கொள்ளலாம். புலிகுத்திகல் சிலைக்கு தொடர்ந்து வழிபாடுகள் நடந்தன. காலசக்கரம் சுழல, சுழல வழிபாடுகள் மறைந்து வரலாற்று நினைவாகிப்போனது.