திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் குளம் வறண்டதால் பக்தர்கள் கவலையடைந்தனர். திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில முன் உள்ள தெப்பகுளம் தண்ணீரை முன்பு குடிப்பதற்கு பயன்படுத்தபட்ட இக் குளத்தில் காலபோக்கில் பொதுமக்கள் குளிக்க துவங்கினர். மழை காலத்தில் முழு அளவில் நிரம்பும் போது 3 ஆண்டுகள் வரை நீர் தேங்கி நிற்கும். இதனால் சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டது. இதனால் வறட்சி காலங்களில் பொதுமக்களுக்கு மிகவும் பயனாக இருந்து வந்தது. தற்போது முற்றிலும் வறண்ட நிலையில் காட்சியளிப்பதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். திருவாடானை சுரேஷ் கூறியதாவது: இக்குளத்திற்கு திருவாடானை கண்மாயிலிருந்து வரத்து கால்வாய் உள்ளது. அக் கால்வாய் துார்ந்து போய்விட்டதால் தண்ணீர் வரத்து இல்லை. மழை பெய்யும் போது தெருக்களில் ஓடும் தண்ணீர் இக் குளத்திற்கு செல்லும். இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குளம் முழு அளவில் நிரம்ப வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதிலும் கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லாததால் முற்றிலும் வறண்டு விட்டது. தற்போதுசிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.