சபரிமலையில் ரூ. 304 கோடியில் வளர்ச்சிப்பணிகள் : தேவசம்போர்டு அமைச்சர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2017 05:11
சபரிமலை: சபரிமலையில் 304 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப்பணிகள் அடுத்த ஆண்டுக்குள் மேற் கொள்ளப்படும், என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார். சபரிமலையில் மண்டல காலத்தில் செய்யப்பட்டு உள்ள பணிகள் தொடர்பாக சன்னிதானத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இடது முன்னணி அரசு கடந்த சில நாட்களில் கோயில்கள் மற்றும் தேவசம்போர்டு விஷயத்தில் பெரும் புரட்சியை செய்து உள்ளது. கோயில்களில் பூஜை செய்ய தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஈழவ சமுதாயம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்துக்கும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முற்பட்ட சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், உறுப்பினரை மாற்றியதற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. கேரளாவின் ஐந்து தேவசம்போர்டில் 3 தேவசம்போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் சபரிமலைக்காக அரசு அனுமதித்த பணத்தில் 40 சதவீதம் வரை செலவு செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டுக்குள் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 304 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படும். இதில் மத்திய அரசின் 100 கோடி ரூபாயும் அடங்கும்.ஊழல் இல்லாத தேவசம்போர்டு வேண்டுமென்று இடது முன்னணி அரசு விரும்புகிறது. கோயில்களை நிர்வகிப்பவர்கள் கோயிலை விழுங்க கூடியவர்களாக இருக்க கூடாது என்பதுதான் இடது முன்னணி அரசின் நிலைபாடு, என்றார்.