பதிவு செய்த நாள்
21
நவ
2017
11:11
பொள்ளாச்சி: வடசித்துார் அருகிலுள்ள காரச்சேரி கிராமத்தில் வடகிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார் மாரியம்மன். போத்தனுார் - வடசித்துார் ரோட்டிலுள்ள கோவிலில், ஆறடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அம்மனை அனைத்து வாகன ஓட்டுனர்கள், பயணிகள், பொதுமக்கள் கையெடுத்து வணங்கி, அருள் பெற்றுச்செல்கின்றனர். 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன், ஊர்மக்கள் வழங்கிய, இரண்டு கோடி ரூபாய் காணிக்கையால் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது.
கோவில் முன், அம்மனை குளிர்விக்கும் வேப்பமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. அம்மனுக்கு, மூன்று கால பூஜையாக, காலை, 7:00 மணி, பகல், 2:00 மணி மற்றும் இரவு, 7:00 - 9:00 மணிக்குள் தினமும் நடக்கிறது.கோவில் வளாகத்தில் மாரியம்மனுக்கு பரிவார தெய்வங்களாக, விநாயகர், முருகன், நவகிரக தெய்வங்கள் எழுந்தருளியுள்ளன. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. கார்த்திகை, அமாவாசை, நாட்களிலும், ஆடி, சித்திரை மாதத்திலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடக்கின்றன. தைப்பூசம் மற்றும் மாசி மாதங்களில் ஒட்டு மொத்த கிராமமே காவடி எடுத்து, அம்மன் சன்னதியில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். அதேபோல, சபரிமலைக்கு மாலையணிந்துள்ள பக்தர்கள் கோவில் வளாகத்தில் பயபக்தியுடன் தங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோவிலின் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. சுபகாரியங்களுக்கு அம்மனிடம் பூ கேட்பது வழக்கம். கோரிக்கை வைப்பது, உடல்நலம் காக்க விரதம் இருக்கின்றனர். அம்மன் அருள் பெற்று பலனடைந்தவர்கள், மீண்டும் கோவிலுக்கு வந்து, அபிேஷகத்தால் அம்மனை குளிர்வித்து, பரிகார பூஜை செய்கின்றனர். அம்மனை வேண்டி ஆடு பலி கொடுத்து, ஊர்மக்களுக்கு விருந்து படைக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் திருவிழா நடத்தி, அம்மனை மகிழ்விக்கின்றனர்.