பதிவு செய்த நாள்
07
டிச
2017
11:12
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பாதுகாப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வால்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்திருவிழா, தைப்பூசத்திருவிழா, சூரசம்ஹாரவிழா, ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா, பழநி பாதயாத்திரைக்குழு சார்பில் அன்னதானம் வழங்கும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.
இது தவிர, கோவிலில் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸ் துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில் கோவில் வளாகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவில் செயல்அலுவலர் சரவணபவன் கூறுகையில், வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவிலின் பாதுகாப்பு கருதியும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.