பதிவு செய்த நாள்
07
டிச
2017
11:12
திருத்தணி, அகத்தீஸ்வரர் கோவிலில், அஷ்டாஷ்டக பைரவ மஹா யாகம் கணபதி ஹோமத்துடன், நேற்று, காலை துவங்கியது. வரும், 10ம் தேதி, 64 பைரவர்களுக்கு யாகம் நடத்தப்படுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் கிராமத்தில் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், 64 பைரவர்கள் மஹா யாகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான அஷ்டாஷ்டக பைரவர் மஹா யாகம் நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், 64 பைரவர், 64 யோகிணிகள் பலி பூஜை நடந்தன.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.வரும், 9ம் தேதி, அகத்திய பெருமானுக்கும், காமாட்சி அம்மனுக்கும், நவகலச ஸ்தபனம் பூஜை மற்றும் ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, முதல் கால யாகசாலை பூஜை, மூலமந்திர, மாலா மந்திர, அஸ்திர மந்திர ெஜபம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது. வரும், 10ம் தேதி, காலை, 7:00 மணி முதல், விசேஷ சந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை ஹோமம், கோ, சுமங்கலி, தம்பதி, கஜ, சர்ப போன்ற பூஜைகள் நடக்கின்றன. இரவு உற்சவர் அகத்தீஸ்வரர் காமாட்சி அம்மனுடன், சிறப்பு அலங்காரத்தில் நாபளூர் கிராமத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.