பதிவு செய்த நாள்
14
பிப்
2018
12:02
திருத்தணி: திருத்தணி தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 108 பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், நான்கு கால பூஜைகள் என, நேற்று இரவு முழுவதும் நடந்தன. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று, காலை, 10:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும், பக்தி கச்சேரி, பரத நாட்டியம் மற்றும் மூலவருக்கு நான்கு கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதே போல், திருத்தணி, நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவிலில், மாலை, 6:00 மணிக்கு, முதற்கால அபிஷேகம் துவங்கியது.
தொடர்ந்து, கரும்பு சாறு, இளநீர், தேன், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் என, பல்வேறு அபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் அதிகாலை, 5:00 மணி வரை நடந்தன. மேலும், பக்தி கச்சேரியும் நடந்தது. திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் தரிசித்த சிவன் கோவிலில், நேற்று, காலை, 6:00 மணிக்கு, அபிஷேகம், பிற்பகல், 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை, மாலை, 4:30 மணிக்கு, 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, சந்தனக்காப்பு, நள்ளிரவு, 12:00 மணிக்கு மீண்டும் பாலாபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன. இரவு, காளி நடனம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பிரம்ம கைலாசம் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, சிவகோடி ஹோமம், பூஜை மற்றும் சிவபார்வதி பூஜை நடந்தது.
இரவு, 7:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை கோலாட்டம், பக்தி கச்சேரி, குலுகு பஜனை, போர்பந்தர் பஜனை ஆகியவை நடந்தது. பின், தெருக்கூத்து நடந்தது. அதே போல் அங்குள்ள மலைக்கோவிலில் சதாசினேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் நான்கு கால பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சர்வமங்கள ஈஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடந்தன. இக்கோவில், 25 அடி உயரத்திற்கு, சிவலிங்க வடிவில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், விடிய, விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டனர்.