பதிவு செய்த நாள்
17
மார்
2018
11:03
அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசயத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், கொங்கு ஏழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தர மூர்த்தி நாயனாரால், தேவாரம் பாடல் பெற்ற கோவிலான, கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்த கோவிலில், பங்குனி மாதம், முதல் மூன்று நாட்கள், சூரிய உதயத்தின் போது, சூரிய ஒளி மூலவர் மீது விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது.பங்குனி மாதம் பிறந்த நேற்று முன்தினம் லேசாக சூரிய ஒளி விழுந்த நிலையில், நேற்று காலை சூரிய உதயத்தின் போது, ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த சூரிய ஒளி, நந்தி மீது பட்டு, லிங்கத்திருமேனி மீது, பொன்நிறத்தில் விழுந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்து, ஓம் நமசிவாய என கோஷமிட்டு, லிங்கேஸ்வரரை வழிபட்டனர்.
அவிநாசி கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது:சிறந்த ஆகமம் மற்றும் கட்டட கலையுடன் இக்கோவிலை அமைத்துள்ள மன்னர்கள், உத்ராயண காலம், மீனம் மாதத்தில், மூலவ மூர்த்தி மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுமாறு, அற்புதமாக வடிவமைத்துள்ளனர். ஆண்டு தோறும், பங்குனி 1,2,3 தேதிகளில், மூலவர் மீது சூரிய ஒளி பட்டுவருகிறது. 90 டிகிரி கோணத்தில் சரியாக விழுந்துள்ளது. நாளை (இன்று) சூரிய ஒளிக்கதிர்கள், தெற்கு நோக்கி நகர துவங்கும். ஒரு வாரம், சுவாமி மீது சூரிய ஒளி படும். சூரிய பகவானே நேரடியாக சுவாமியை ஒளியால் அர்ச்சனை செய்து வழிபடுவதாகவும், இந்த நாட்களில் அவிநாசிலிங்கேஸ்வரரை வழிபட்டால், பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அகலும் என்பது ஐதீகம்.இவ்வாறு, சிவாச்சார்யார்கள் கூறினர்.