பதிவு செய்த நாள்
19
மார்
2018
12:03
திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், தரைக்கற்கள், பாரம்பரிய முறையில் இணைக்கப்படுகின்றன. மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவில் ஆகும். இக்கோவிலை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை, வழிபாடு சார்ந்தும், தொல்லியல் துறை, பாரம்பரிய சின்னம் சார்ந்தும் நிர்வகிக்கின்றன. திருமணம், மகப்பேறு, ராகு, கேது பரிகார கோவிலாக விளங்கும் இக்கோவிலின் கும்பாபிஷேகம், 2006ல் நடந்தது. தற்போது மீண்டும் நடைபெற உள்ள நிலையில், கோவில் மண்டபம், தரைத்தளங்களில் புனரமைப்பு பணிகளை, தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.
இத்துறை, மஹா மண்டப மேல்தள கான்கிரீட், கற்களை முற்றிலும் அகற்றி, கனத்தை குறைத்து, மீண்டும் கற்கள் பொருத்தி சீரமைத்தன. மண்டபம் உள்ளிட்ட பகுதி தரைத்தள, கான்கிரீட் தரையை முற்றிலும் அகற்றி, கற்களில் தரைத்தளம் அமைக்கிறது. தற்காலத்தில், கற்களை இணைக்க, ஆற்று மணல், சிமென்ட் கலவை பயன்படுத்தப்படும் நிலையில், தொல்லியல் துறை, கோவிலின் பழங்கால தன்மை கருதி, பாரம்பரிய முறையிலான கலவையை பயன்படுத்துகிறது. துாய மணலுடன், சுண்ணாம்பை கலந்து, பல நாட்கள் ஊற வைத்த கலவையில், கடுக்காய், வெல்லம் கலந்து, இரு வாரம் ஊறவைத்த பின் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை தேவைக்கேற்ப கலந்து, பதிக்கப்பட்ட கற்களின் இடைவெளி பகுதியில் நிரப்பி, உறுதிப்படுத்தப்படுகிறது.