ஆடி வந்தாச்சு... களைகட்டியது விருதுநகர் அம்மன் கோயில்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2018 12:07
விருதுநகர் : பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி. சூறைக்காற்றோடு அம்மனின் அருட் காற்றும் அரவணைக்கும் மாதமும் இதுவே. தினம் தினம் பண்டிகைகள் கோயில்களில் களைகட்டும். விருதுநகர் பராசக்தி மாரியம்மன் , வெயிலுகந்தம்மன் கோயில், துள்ளுமாரியம்மன் கோயிலில் நேற்று ஆடி முதல் வெள்ளிகிழமையை யொட்டி பெண் பக்தர்கள் குவிந்தனர். வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். நினைத்தது நிறைவேற அகல்விளக்கேற்றி வழிப்பட்டனர். நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்தும், எலுமிச்சை மாலை அளித்து மனம் மகிழ்ந்தனர். விருதுநகர் மேலரதவீதி இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சொக்கநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். இங்கு பட்டர் பாலாஜி தலைமையில் பூஜை நடந்தது. எரிச்சநத்தம் ஆதிசக்தி அன்னை மாசாணி அம்மன் தியான பீடத்திலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தது. உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.