பதிவு செய்த நாள்
13
அக்
2018
03:10
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பழமை பெருமை வாய்ந்த தெப்பக்குளத்தின் சீரமைப்பு பணிகள் தொய்வு நிலையில் உள்ளன. திருச்செங்கோடு - ஆனங்கூர் சாலையில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது.
சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. வைகாசி விசாக தேரோட்ட திருவிழாவில், அர்த்தநாரீஸ்வரர் தெப்ப உற்சவம், பெரிய மாரியம்மன் கோவில்
கம்பம் விடுதல், சின்ன ஓங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பூமிதிக்கும் பக்தர்கள் தெப்பக்குளத்தில் நீராடிய பின்னர் தான் குண்டம் இறங்குவர்.
குளத்தின் படிகள் சிதிலமடைந்தது. கழிவுநீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த, 2014ல் பொது மக்களின் பங்காக முதற்கட்டமாக, 25 லட்சம் ரூபாய் மாவட்ட நிர்வாகத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. பணி துவக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது, தண்ணீரில், பாசி படர்ந்து துர்நாற்றம் வீசிவருகிறது. கொசு உற்பத்தி கூடாரமாக உள்ளது. தெப்பக்குளம் சீரமைப்பு பணியை விரைவுபடுத்தி, ஆன்மிக பெருமையை நிலை நிறுத்த, நகராட்சி அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.