பதிவு செய்த நாள்
19
அக்
2018
03:10
திருப்போரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே, பல இடங்களில், சிலை தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், நான்கு புராதன கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்போரூர் அருகே உள்ளது, வெண்பேடு கிராமம். இவ்வூரில் பழமையான பைரவர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோவில்கள் உள்ளன. சிதிலமடைந்திருந்த அகஸ்தீஸ்வரர் கோவில், 12 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது சில கற்சிலைகள் அங்கு கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், இக்கோவில் அருகே உள்ள நிலத்தை பயன்படுத்தும், ராஜேஷ் என்பவர் நேற்று, கனரக இயந்திரம் மூலம் அப்பகுதியை துாய்மைபடுத்தும் பணியை மேற்கொண்டார். அப்போது, மண்ணில் புதைந்திருந்த ஒரு கற்சிலை தென்பட்டது. அதன் அருகில் மீண்டும் தோண்டிய போது, அடுத்தடுத்து மூன்று கற்சிலைகள் கிடைத்தன. அவை, 3 – 4 அடி உயரத்தில் இருந்தன. அதிக எடை கொண்ட அந்த கற்சிலைகளை, கனரக இயந்திரத்தின் மூலம் பாதுகாப்பாக எடுத்து கோவில் அருகே வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர் மூலம், திருப்போரூர் வட்டாட்சியர், ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், வெண்பேடு சென்று, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை மீட்டார். பெருமாள், கருடாழ்வார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நவராத்திரி நாளில், பழங்கால பெருமாள் கற்சிலைகள் கண்டெக்கப்பட்டது, இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.