பழநி: விஜயதசமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் சூரன்வதம் நடந்தது. நவராத்திரி விழா பழநி முருகன் கோயிலில் அக்.,9ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
விஜயதசமியை முன்னிட்டு நேற்று மலைக்கோயிலில் மாலை 3:00 மணிக்கு சன்னதி நடை சாத்தப்பட்டது. மலைக்கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக பராசக்திவேல் அடிவாரம் வந்தது. அடிவாரம் பெரியநாயகியம்மன் கோயில் வந்து தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி பராசக்திவேல், கேடயம், வில், அம்புடனும், கருடவாகனத்தில் லட்சுமி நாராயணப்பெருமாளும் கோதை மங்கலத்திற்கு புறப்படாகினர். அங்கு கோதையீஸ்வரர் கோயிலில், புலிப்பாணி பாத்திரசுவாமி துர்காவாக மாறி வாழைமரம், வன்னிமரத்தில் அம்பு எய்து மகிஷாசூரன் வதம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் ( பொ ) செந்தில்குமார் பங்கேற்றனர். பின் முத்துகுமாரசுவாமி பெரியநாயகியம்மன் கோயிலுக்கும், பராசக்திவேல் மலைக்கோயிலுக்கும் வந்தடைந்த பின் நள்ளிரவில் அர்த்தஜாம பூஜை நடந்தது.