பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாலையில் யாகசாலை பூஜை துவங்கியது. 15ம் தேதி காலையில் சூரிய வாகனத்திலும், மாலையில் சந்திர வாகனத்திலும், அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர், தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக உலா வந்து அருள்பாலித்தார்.பூத வாகனத்தில், 16ம் தேதி மாலையிலும்,புஷ்ப பல்லக்கில் நேற்று மாலையிலும் சுவாமி உலா நடந்தது. சுவாமி வாகனத்தின் முன், ஜமாப் இசை குழு இசையோடு, இளைஞர்கள் நடனமாடி சென்றனர்.இன்று (18ம் தேதி) காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு விநாயகர், அம்மன், சந்திரசேகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் திருவீதியுலா வரும் நிகழ்வு நடக்கிறது.திருமுறை பண்ணிசை பாடல் பாடும் நிகழ்ச்சி நாளை 19ம் தேதி காலையிலும், பின்னர், சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மாலையில் சொற்பொழிவு நடக்கிறது. 20ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதை முன்னிட்டு, தேர் பழுது பார்த்து அலங்கரிக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.