பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
02:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், கிழக்கு ராஜ வீதியில் உள்ள, முக்தேச்வரர் கோவில் கும்பாபிஷேகம், 300 ஆண்டுகளுக்குப் பின், இன்று (ஏப்., 22ல்), நடைபெறுகிறது.கடந்த, 8ம் நூற்றாண்டில், காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட முக்தேச்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், தர்ம மஹாதேவீச்சரம் என்றும், மாணிக்கேச்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள, இக்கோவில் கும்பாபிஷேகம், 300 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்., 22ல்), கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையொட்டி, 23 லட்சம் ரூபாயில், ஆறு மாதங்களுக்கு முன், திருப்பணிகள் துவங்கின. கோவில் பழமை மாறாமல் இருக்க, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகிய இயற்கை கலவை மூலம், தொல்லியல் துறையினர், திருப்பணி மேற்கொண்டு முடித்தனர்.கும்பாபிஷேகத்தையொட்டி, இன்று (ஏப்., 22ல்) காலை, 5:30 மணிக்கு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும், 9:00 மணிக்கு, மஹா அபிஷேகமும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், அ.மு.வெ.சுப்ரமணியம், முதுநிலை பராமரிப்பு அலுவலர், தி.சரவணன், பரம்பரை தர்மகத்தா, வெ.தேவராஜ் உட்பட பலர் செய்து வருகின்றனர்.