ஓசூர், கோதண்டராமர் சிலையை கொண்டு செல்ல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சிமென்ட் குழாய் அமைத்து அதன் மீது சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம் 9ம் தேதி முதல் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மண்ணை கொட்டி தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்தன.கடந்த 10ம் தேதி இரவு கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பால் சாலை பணி நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால் கோதண்டராமர் சிலை ஆற்றை கடப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளிலும் அமைத்த மண் சாலையில் சிமென்ட் குழாய் பதிக்கும் பணியில் சிலை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.அதற்கு மேல் மண் சாலை அமைத்து விட்டால் ஆற்றில் வரும் தண்ணீர் குழாய் வழியாக சென்று விடும். அத்துடன் கோதண்டராமர் சிலையும் ஆற்றை கடந்து விடும் என்ற யோசனையில் வேலை நடந்து வருகிறது. இதனால் இன்னும் சில நாட்களில் கோதண்டராமர் சிலை கர்நாடக மாநிலம் புறப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.