பதிவு செய்த நாள்
21
மே
2019
12:05
ஈரோடு: சிவன் உச்சி குளிர, வன்னிமர லிங்கத்துக்கு, வில்வ தீர்த்த சதாகால அபிஷேகம் நடக்கிறது. இயற்கை மாற்றத்தால், நாட்டில் வெப்பநிலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில், 100 டிகிரி வெயில் சாதாரணமாகி விட்டது. உச்சபட்சமாக, 107 வரை எட்டியுள்ளது. இயற்கையை அழித்ததால் ஏற்பட்ட வினையை, இறையருள் கொண்டு மாற்றுவோம் என்ற ரீதியில், ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், வன்னிமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள, சிவலிங்கத்துக்கு சதாகால அபிஷேகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறியதாவது: ருத்ர மூர்த்தியான, சிவபெருமானை சாந்தப் படுத்தினால், வேண்டுதல் நிறைவேறும். சிவனை குளிர்ச்சிப்படுத்தினால், இயற்கையின் வேட்கை தணித்து, மழை பெய்யும் என்பது, சான்றோர் வாக்கு. இதன்படி, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், வன்னிமரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள, சிவலிங்கத்தின் சிரசத்தில், வில்வ தீர்த்தம் சதாகாலமும் விழும் வகையில், தாராபாத்திரம் தொங்க விடப்பட்டுள்ளது. வட மாநில சிவாலயங்களில், ஆண்டு முழுவதும், இது நடைமுறையில் உள்ளது. தென்னாட்டில் அப்படியில்லை, கோடை காலம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட மூன்று மாதங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. இந்த அபிஷேகத்தால், ஆண்டவன் உச்சி குளிர்ந்து, மக்களுக்கு நலம் அருள் கிடைக்கும். இதனால், நாடு சுபிட்ஷம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.