பதிவு செய்த நாள்
21
மார்
2012
11:03
திற்பரப்பு: குருசுமலை திருப்பயணம் இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. குருசுமலையில் 55வது திருப்பயணம் இன்று துவங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. "சிலுவை நமது அருள் வாழ்வின் அர்ப்பணத்தின் அடையாளம் என்ற சிந்தனையுடன் இந்த ஆண்டின் திருப்பயண நிகழ்வுகள் அமைகிறது. இன்று மதியம் 2 மணிக்கு ஆனப்பாறை பாத்திமா மாதா குருசடியில் இருந்து புறப்படும் பவனியில் ஆனப்பாறை பங்குத்தந்தை ஜோஸ் முட்டத்தான் திருக்கொடி அர்ப்பணம் செய்கிறார்.
மலை அடிவாரத்தில் மாலை 3.30 மணிக்கு நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடியேற்றுகிறார். தொடர்ந்து மலை உச்சிக்கு பங்குத்தந்தை ஷாஜி.டி.ஸாவியா தலைமையில் திவ்விய ஜோதி பயணம் செல்கிறது. துவக்கவிழா பொதுக்கூட்டத்திற்கு ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை வகிக்கிறார். கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சிவகுமார், கலாசார அமைச்சர் ஜோசப் பேசுகின்றனர். பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ., க்கள் ஜார்ஜ், சிவன்குட்டி, திருவனந்தபுரம் மாவட்ட பஞ்., தலைவர் ரமணி பி.நாயர், கடையல் பஞ்., தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இரண்டாம் நாளான நாளை காலை கடையல் பங்குத்தந்தை ஆரோக்கிய சாள்ஸ் தலைமையில் திருப்பலி, காட்டாக்கடை இம்மானுவேல் வாய்ஸ் நடத்தும் இன்னிசை, தொடர்ந்து ஆரியநாடு மறைவட்ட முதன்மை பணியாளர் ரூபஸ் பயஸ்லீன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மதியம் ஆறாட்டுகுழி சி.எஸ்.ஐ., சபை தலைவர் இயேசுதாஸ் தலைமையில் இறைவார்த்தை வழிபாடு, மாலை நாகக்கோடு பங்குத்தந்தை மனோகியம் சேவியர் தலைமையில் திருப்பலி, மாலை நடக்கும் கலாசார விழாவில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட நிட்ஸ் இயக்குனர் அனில்குமார் தலைமை வகிக்கிறார். கேரள சட்டசபை தலைவர் கார்த்திகேயன், ஆற்றிங்கல் எம்.பி., சம்பத், முரளீதரன் எம்.எல்.ஏ., கவிஞர் முருகன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மூன்றாம் நாள் காலை மலை உச்சியில் பேச்சிப்பாறை பங்குத்தந்தை பாக்கியராஜ் தலைமையில் தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை நடக்கும் மத ஒற்றுமை மாநாட்டில் கேரள இளைஞர் நலத்துறை அமைச்சர் ஜெயலட்சுமி, அருவிப்புறம் ஆசிரம தலைவர் சாந்த்ரானந்தா, தம்பானூர் ஜூமா மஸ்ஜித் இமாம் கம்ஸா மவுலவி பரூக்கி, பி.ஓ.சி., இயக்குனர் ஸ்டீபன் ஆலத்தறா, யூத மதத்தை சேர்ந்த பிரேம்தாஸ் சுவாமிதாஸ் யெகூதி, ஜைனமத பிரதிநிதி சைலேஸ்ஷா, ஆற்றூர் மரிய கல்லூரி முதல்வர் சுஜர் பேசுகின்றனர்.நான்காம் நாள் காலை திருப்பலி, இன்னிசை நடக்கிறது. மாலை நடக்கும் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து நடக்கும் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வேணுகோபால், எம்.பி., க்கள் சசிதரூர், ஹெலன் டேவிட்சன், எம்.எல்.ஏ., க்கள் விஜயதரணி, ஜாண்ஜேக்கப், பிரின்ஸ், பேசுகின்றனர். ஐந்தாம் நாள் காலை நடக்கும் திருப்பலிக்கு குருசுமலை திருத்தல அதிபர் ஜோயி மத்தியாஸ் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து நடக்கும் ஆடம்பர திருப்பலிக்கு திருவனந்தபுரம் உயர்மறைமாவட்ட பேராயர் மரிய சூசைபாக்கியம் தலைமை வகிக்கிறார். மதியம் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை குருகுல முதல்வர் கிறிஸ்துதாஸ் திக்கொடியிறக்குகிறார். இத்தகவலை திருத்தல அதிபர் ஜோயி மத்தியாஸ் தெரிவித்தார்.