பதிவு செய்த நாள்
14
நவ
2019
11:11
ஆர்.கே.பேட்டை: நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், நேற்று நடந்த கிருத்திகை உற்சவத்தில், திரளான பக்தர்கள், சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். நித்ய பூஜைகளுடன், கிருத்திகை உற்சவமும் இங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, கிருத்திகையையொட்டி, காலை, 10:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில், உற்சவர் பெருமான் உள்புறப்பாடு எழுந்தருளினார். காலை முதல், இரவு வரை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சமீபத்திய மழையால், அத்திமாஞ்சேரிப்பேட்டை சுற்றிலும் பசுமை தவழ்கிறது. மலைக்கோவிலுக்கு சுவாமியை தரிசிக்க வந்திருந்த பக்தர்கள், இயற்கை அழகையும் ரசித்து சென்றனர். இதேபோல், பொதட்டூர்பேட்டை ஆறுமுக சுவாமி மலைக்கோவில், நெடியம் செங்கல்வராய சுவாமி மலைக்கோவில்களிலும் நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது.