அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்தனர்.
பகவான் ஸ்ரீ ராம்லல்லா அனைத்தையும் உள்ளடக்கிய சத்தியப் பிரமாணம் மற்றும் வேதங்களின் புனிதத்தைப் பாதுகாப்பவர். பிரபஞ்சத்தின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஸ்ரீராமரின் அவதாரம் தரிசிக்க தினமும் அயோத்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெற முடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் சுவாமி ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமபிரானை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.