அச்சிறுப்பாக்கம்; அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால் நடும் விழா, நேற்று சிறப்பாக நடந்தது. அச்சிறுப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற தொண்டைநாடு சிவ தலங்களில் ஒன்று, இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில். சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமான இக்கோவிலில், சித்திரை பெருவிழாவுக்கான பந்தக்கால், நேற்று காலை, 6:00 மணி முதல் 7:30 மணிக்குள் வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது. உத்சவ மூர்த்திகளான விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.