பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பக்தர்களின், 40 ஆண்டுகால கோரிக்கைக்கு பின்னர், மசராய பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பழையூர் அருகே புதுப்பாளையம் செல்லும் வழியில் மசராய பெருமாள் கோவில் உள்ளது. மிக பழமையான ஓடுகள் வேய்ந்த இக்கோவிலில் மசராய பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இது குறித்து, மசராய பெருமாள் கோவில் பக்தர்கள் கூறுகையில், பழமையான இக்கோவில் சார்பாக சுமார், 40 ஆண்டுகளுக்கு முன்பு, மசராய பெருமாள், வெள்ளை குதிரையில், ராக்கிபாளையம், பூச்சியூர் உள்ளிட்ட, 18 கிராமங்களில் வலம் வந்து மிகப்பெரும் பண்டிகையாக கொண்டாடப்படும். ஆனால், காலப்போக்கில் கோவில் சிதலமடைந்ததால், புனரமைக்க முடியாமல், பராமரிப்பின்றி, இடிந்து போன நிலையில் கிடக்கிறது. கோவிலுக்கு நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 3 ஏக்கர், 55 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. ஆனால், கோவிலில் ஒருவேளை விளக்கு ஏற்ற கூட ஆளில்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இதை ஹிந்து சமய அறநிலைத்துறை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தோம். தற்போது, பாலாலயம் நடத்த அனுமதி வழங்கி உள்ளது என்றனர்.
இதையடுத்து, இன்று காலை மத்தம்பாளையம் காரண விநாயகர் கோயிலின் உபகோவிலான மசராய பெருமாள் கோவிலில் செயல் அலுவலர் வெண்ணிலா, நகை சரிபார்ப்பு அலுவலர் விக்னேஷ் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலைய துறையினர், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், ஆனந்தன், கோவில் முக்கிய பிரமுகர் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் மசராய பெருமாள் கோவிலில் உள்ள மூன்று மூலவர் சிலைகள், இரண்டு நாகர் சிலைகள், இரண்டு கருப்பராயன் சிலைகள், கோயிலுக்கு வெளியே உள்ள நான்கு முனீஸ்வரன் சிலைகள் ஆகியவற்றை அதற்குரிய பூஜைகள் செய்து அகற்றி, பாலாலயம் செய்தனர்.
இது குறித்து, ஹிந்து சமய அறநிலை துறையினர் கூறுகையில், தற்போது உள்ள அமைப்பு மாதிரியே கோவில் கருங்கல் கட்டடம் கட்டப்படும். தற்போது சிதலமடைந்துள்ள கோவில், மேல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, இடித்து அகற்றிய பின்பு கட்டுமான பணிகள் துவங்கும் என்றனர். முன்னதாக கோயில் சிலையில் உள்ள சக்தி, கும்பங்களில் நிலை நிறுத்தும் பணி நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.