சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி துவங்குகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு வரும் 25 ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில், சந்திரன், சூரியன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. புத்தாண்டு தினத்தன்று தங்க தேரில், சோமாஸ்கந்தர், வெட்டுக்குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறும். தேர் திருவிழா, வரும், ஜன., 2 ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தேரோட்டம் முடிந்து, சுவாமி ஆயிரங்கால் முன் மண்டபத்தில் எழுந்தருளுவார். தொடர்ந்து, இரவில், ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில், நடராஜர் சிவகாம சுந்தரிக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். தொடர்ந்து, அடுத்த நாள் அதிகாலை, 4:00 மணி முதல் 6:00 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். பின்னர், காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர், மதியம் 3:00 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது. வரும், 4 ம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா, 5 ல் ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவத்துடன் 10 நாள் உற்சவம் நிறைவு பெறகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.