ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் முப்பதும் தப்பாமே என்ற திருப்பாவை முற்றோதல் விழாவில் திரளான பெண்கள் பங்கேற்று ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில் நடந்த விழாவில், ஆண்டாள் வேடம் அணிந்த பரதநாட்டிய குழுவினரின் நாட்டியம், திருப்பாவை பாடல்கள் முற்றோதலும் நடந்தது. பல்வேறு மங்கல பொருட்கள் கொண்ட சீர்வரிசை தட்டினை பெண்கள் ஏந்தி நான்கு ரத வீதிகளில், திருப்பாவை பாடல்கள் பாடி வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சமர்ப்பித்து வழிபட்டனர். இதில் வீரவநல்லூர் குலசேகரமடம் ராமபிரமேய ராமானுஜ ஜீயர் உட்பட பல்வேறு மடங்களின் ஜியர்கள், சாதுக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பு, நிர்வாகிகள் செய்திருந்தனர்.