ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங்கில் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்தும் குடிநீர், கழிப்பறை வசதி இன்றி பக்தர்கள் பாதிக்கின்றனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள் வருகின்றனர். இந்த வாகனங்களை ஜெ.ஜெ.,நகரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள். இங்கு ஒரு வாகனத்திற்கு கட்டணம் ரூ. 20 கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. கார் பார்க்கிங் வளாகத்தில் பக்தர்களுக்கு ஓய்வு அறை கட்டடம், சுத்திகரித்த குடிநீர், கழிப்பறை வசதி இருந்தது. மேலும் வாகனங்களை பாதுகாக்க 12 சி.சி.டி.வி., கேமராக்கள் இருந்தது. இவைகளை துவக்கத்தில் பராமரித்த கோயில் நிர்வாகம் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. மேலும் சி.சி.டி.வி.,கேமராக்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பழுதாகி முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் தாகம் தணிக்க, கடைகளில் குடிநீர் பாட்டில் வாங்கி பருகும் அவலம் உள்ளது. கழிப்பறையில் தண்ணீர் இன்றி பக்தர்கள் பயன்படுத்த முடியாதபடி சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் ஹிந்து அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. இக்கோயிலில் சிறப்பு தரிசனம், புனித நீராடல் உண்டியல் காணிக்கை என ஓராண்டில் சராசரியாக ரூ. 30 கோடி வருவாய் கிடைத்தும் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.