திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள வெற்றி ஐயப்பன் கோயிலில் இரண்டாம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.
களிமண்குண்டு காந்தாரியம்மன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் இன்று மாலை 4:00 மணிக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் உடலில் பல வண்ணப் பொடிகளை பூசியவாறும், நாட்டிய குதிரைகள் நடனம் ஆடியவாறு மேளதாளங்கள் முழங்க முன்னே சென்றனர். பேட்டை துள்ளும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு கி.மீ., தொலைவில் உள்ள ஆஞ்சநேயர்புரத்தில் உள்ள சக்கு ஊரணியில் வைத்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குளத்தில் நின்று கொண்டனர். தாம்பூல தட்டில் உற்ஸவர் ஐயப்பனுக்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி, இளநீர் உள்ளிட்ட ஏழு வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஆராட்டு விழா நடந்தது. ஊரணியில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் மீண்டும் வெற்றி ஐயப்பன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வெற்றி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை குருசாமி முத்துக்கருப்பன் செய்திருந்தார். ஐயப்ப பக்தர்கள் ராமு, ஐயப்பன், முத்துராமு, பாலா மற்றும் களிமண்குண்டு கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பஜனை, கூட்டு வழிபாடு உள்ளிட்டவைகள் நடந்தது.