பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழாவையொட்டி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலாலயம் செய்த பின், கோவிலில் மாகாளியம்மன், ருத்ரலிங்கேஸ்வரர், விநாயகர், நவக்கிரகம், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் தனித்தனியாக கட்டும் பணிகள் நடக்கிறது. இதை தொடர்ந்து, ராஜகோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், ராஜகோபுரம் கட்ட முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், பணிகள் குறித்து கேட்டறிந்தார். அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில், ‘‘கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று நிலை ராஜகோபுரம் கட்டும் பணி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம்,’’ என்றார்.