திருத்தணி: திருத்தணி அடுத்த குடிகுண்டா கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும், மூலவருக்கு சந்தன காப்பு, மதியம் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவில் மகாபாரத நாடகம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், இரவு 7:30 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தன.
இதில், 1,000 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். அப்போது, பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நேற்று மதியம், கோவில் வளாகத்தில் தர்மர் பட்டாபிஷேகத்துடன், நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.