4,389 அடி உயர மலை மீது சிடிலு மல்லிகார்ஜுனா கோவில்



மைசூரின் பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா கிராமத்தில், பெட்டதபுரா மலை உச்சியில் உள்ளது சிடிலு மல்லிகார்ஜுனா கோவில். கடல் மட்டத்தில் இருந்து 4,389 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் சிடிலு என்றால் இடி – மின்னல் என்று பொருள். இக்கோவிலின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று பலத்த இடி – மின்னல் இந்த மலை உச்சியை பலமாக தாக்குவது தான். மின்னல் பாய்ந்து வந்து கருவறையில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி மீது பட்டு, மூலவரை வலம்வந்து பின் மறைந்து விடும்.

800 ஆண்டுகள் ஒரு முறை சிவலிங்கத்தின் மீது மின்னல் தாக்கியதில், சிவலிங்க உச்சந்தலை பகுதியில் வடு ஏற்பட்டதாகவும் வரலாறுகள் சொல்கின்றன. மல்லிகார்ஜுனா சுவாமியை அன்னதானி என்றும் பக்தர்கள் அழைக் கின்றனர்.

சுமார் 800 ஆண்டுகள் பழமையான செப்பு பாத்திரங்களை இப்போதும் இக்கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்வதே பெரும் சவால் தான். வாகன பாதை கிடையாது. 3,100 படிக்கட்டுகள் வழியாக ஏறி தான் செல்ல வேண்டும்.

அடர்ந்த வனப்பகுதி வழியாக பாதை செல்வதால், வனவிலங்குகளை பார்க்கும் வாய்ப்பும் உண்டு. இதனால் கவனமாக செல்வது அவசியம். ஆங்காங்கே அழகிய நுழைவாயில்களும், ஓய்வெடுக்கும் மண்டபங்களும் உள்ளன. மிகவும் பழமையான கோவில் என்பதால், இந்திய தொல்லியல் துறையினர் பராமரிக்கின்றனர்.

இங்கு 12க்கும் மேற்பட்ட பழமையான கன்னட கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒரு கல்வெட்டில் பாளையக்காரர் பிரிய செங்கல்வா என்பவர் கோவில் பராமரிப்பிற்காக 33 கிராமங்களை தானமாக வழங்கியது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நந்தி சிலை கோவில் சுவரில் மகிஷாசூரமர்த்தினி, சப்தகன்னியர், தட்சிணாமூர்த்தி, ராமாயண காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு நேர் எதிரே நந்தி சிலை இருக்கும்.

ஆனால், இந்த கோவிலில் 200 மீட்டர் துாரம் தள்ளி, செங்குந்தான பாறை மீது நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி பெட்டதபுரா திருவிழா என்ற பெயரில் மலை அடிவாரத்தில் திருவிழா நடக்கும்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிவன் – பார்வதி உற்சவ சிலைகளை தங்கள் தோளில் சுமந்து படிக்கட்டுகளில் ஏறி சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.

கோவில் நடை தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். மலை உச்சியில் இருந்து 180 டிகிரி செல்சியஷில் இயற்கையின் அழகை கண்டு ரசிக்கும் வாய்ப்பும் பெறலாம்.

எப்படி செல்வது?

* பெங்களூரில் இருந்து பெட்டதபுரா 180 கி.மீ., துாரம்; மைசூரில் இருந்து 85 கி.மீ., துாரம்.
* பஸ்சில் சென்றால் பிரியப்பட்டணா சென்று அங்கிருந்து பெட்டதபுரா கிராமத்திற்கு ஆட்டோவில் செல்லலாம்.
* ரயிலில் சென்றால் மைசூரு அல்லது கே.ஆர்.நகர் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்.
* சொந்த வாகனத்தில் செல்வோர் மலை அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்